பாகிஸ்தானில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிக்கு இலங்கையில் இருந்து ஆறு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வீரர்களை தேர்வு செய்வதற்காக இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் இலங்கை இராணுவம் சார்பில் பங்குகொண்ட மலையக வீரர் விக்னராஜ் வக்சன் முதலிடம் பெற்றுள்ளார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி நடைபெற்ற தெரிவுப் போட்டிகளில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட போட்டிகளின் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் தெற்காசி போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்க வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கமும், லங்கா லயன்ஸ் மெய்வல்லுனர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த தெரிவுப் போட்டியின் 10 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட விக்னராஜ் வக்சன் முதலிடம் பிடித்தார். போட்டியை நிறைவு செய்ய 32.11 நிமிடங்களை அவர் எடுத்துக் கொண்டார்.
அண்மைக் காலமாக தேசிய ரீதியிலான நகர்வல ஓட்டம், அரை மரதன், 10 ஆயிரம் மீற்றர், 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி வருகின்ற தலவாக்கலையைச் சேர்ந்த வக்சன், இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 1500 மீற்றர் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 8 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட கனிஷ்ட போட்டியில் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த லஹிரு அசிந்த வெற்றியீட்டினார். அவர் போட்டித் தூரத்தை 27.53 நிமிடங்களில் பூர்த்தி செய்தார்.
மாளிகைக்காடு குறூப் நிருபர்