திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் தீர்வு காணப்படாது தேங்கிக் கிடக்கும் சிக்கலான காணிப் பிரச்சினைகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவை அப்பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தமது சேவையை வழங்கினர்.
இதன்போது பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட அநேகமான காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக, உரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடமாடும் சேவையானது திருகோணமலை மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்பட்டதாகவும், இதற்கு அகம் தன்னார்வ அமைப்பு அனுசரணை வழங்கியதாகவும், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தெரிவித்தார்.
தோப்பூர் தினகரன் நிருபர்