அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலைகளை திறந்து, விவசாயிகளிடமிருந்து பெரும்போக நெல்லை அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, திட்டமட்ட விவசாய அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம்.என்.அஹமட் தெரிவித்தார்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நெல்லை கொள்வனவு செய்வதற்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளை திறந்து உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபயவிக்கிரமவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கமைய உத்தரவாத விலைக்கு பெரும்போக நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
கடந்த பெரும்போகக் காலத்தில் சில பிரதேசங்களில் நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படாமல் கைவிடப்பட்டதால், உத்தரவாத விலைக்கு நெல்லை விற்க முடியாமல் இருந்ததாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
அம்பாறையில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையும் அதனைத் தொடர்ந்து சேனநாயக்க நீர்பாசனக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏக்கருக்கு 20 தொடக்கம் 25 மூடை நெல்லே கிடைப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
ஒலுவில் விசேட நிருபர்