கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் மற்றும் ஜெயபுரம் தேவன்கட்டு ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெல்வயல்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம், தேவன்கட்டு ஆகிய குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெரும்போக நெற்செய்கைக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் தருவாயில் காட்டுயானைகளால் பயிர்செய்கைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வன்னேரிக் குளம் பகுதியில் அதிகளவில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் அறுவடைக்கு தயாராகவுள்ள பல ஏக்கர் நெல்வயல்களை காட்டு யானைகள் அழித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் இரவு வேளைகளில் காவலிருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்
இதே வேளை தேவன் கட்டு மற்றும் ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 15 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டடு முற்றுமுழுதாக கைவிடப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(பரந்தன் குறூப் நிருபர்)