திருகோணமலை மாவட்ட சாரணிய சங்கத்தினால் கிண்ணியா ஜாயா மகளிர் மகா வித்தியாலய சாரண இயக்கத்தில் இணைந்து கொண்ட பெண் சாரணியர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ். ரி. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட சாரணிய ஆணையாளர் சிங்காரவேல் சசிகுமார் கலந்து கொண்டு சாரணிய அணிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வினை வழி நடத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தில், இது 34 ஆவது சாரணிய குழுவாகும்.
இந்த வைபவத்தில் பாடசாலை அதிபர் உரையாற்றும் போது,
சாரணர் இயக்கம், உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகும். உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.
நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது. இராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் இராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை செயல்படுத்தினார். எமது பாடசாலையில் இந்த இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு சகல வழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் வழங்கிய மாவட்ட சாரணர் ஆணையாளருக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் என். அரபாத் மற்றும் கல்லடிவெட்டுவான் வித்தியாலய அதிபர் எம். எம். எம். முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவில் முதலாவது பெண் சாரணிய குழு என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா மத்திய நிருபர் – கியாஸ்