இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் பாரம்பரியம் நிகழ்ச்சி தொடரில் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு வழங்கி பெருமிதம் தேடிக்கொண்டோர் வரிசையில், எதிர்வரும் செவ்வாய் (16) இரவு 8.15 மணி நிகழ்ச்சியில் பிரபல சிறுகதை பெண் எழுத்தாளர் கொழும்பு எம்.ஏ.ரஹீமா அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 1980ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தில் இளையோர் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதுடன், ‘மாதர் மஜ்லிஸ்’ நிகழ்ச்சிக்கு தொடராக பிரதியாக்கம் செய்துள்ளார். சிறுகதைகளை அவர் எழுதியதுடன், விசேட நாட்களில் ஒலிபரப்பான கவியரங்குகளுக்கு கவிதைகள் எழுதி குரலும் கொடுத்துள்ளார்.
சமகால நிகழ்வுகளை, சமூகத்தில் நிறைந்திருக்கும் குறைகளை மையப்படுத்தி எழுதுவதில் மெச்சத்தக்க தைரியம் கொண்ட பெண் எழுத்தாளராக இலக்கியப் பரப்பில் புகழ் தேடிய ஒருவராவார். அண்மையில் அவர் வெளியிட்ட ‘சூல்சோறு’ சிறுகதைத்தொகுதி அவரது எழுத்து திறமைக்குச் சான்றாகிறது.
வாழைத்தோட்டம் மிஹிந்து மாவத்தை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கல்வி கற்று, உயர் கல்வியை திஹாரிய தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அவர் தொடர்ந்திருந்தார். குருநாகல் தெலும்புகல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற அவர், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 22 வருடங்கள் பணியாற்றி, 2008ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.