வேலணை பகுதியில் கண்டு பிடிப்பு
யாழ்.வேலணை பகுதியில் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகுமென தெரிவிக்கப்படுகிறது. தொல்லியல் மையம், வேலணை சாட்டி கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இலங்கையின் கரையோர வரலாற்றுப் பயன்பாடு மற்றும் கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள், இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
(யாழ்.விசேட நிருபர்)