ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளைக் கொண்ட அரிசி ஆலையொன்றினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சீன அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (07) தெரிவித்தார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸவில் நவீன வசதிகளைக் கொண்ட அரிசி ஆலையை நிர்மாணிப்பதற்கு சீன நாட்டின் ஹைனேன் பிராந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இதனூடாக இதுவரை எந்த அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனமோ நிருவாதளவிற்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த அரிசி ஆலையினை மேற்படி பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக இப் பிரதேசங்களில் தொழிலின்றி இருக்கும் இளைஞர்களின் ஒத்துழைப்பினை கூட்டுறவுத் திட்ட அடிப்படையில் பெற்று இதனை முன்னெடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரமன்றி முழு தென் மாகாணத்திலும் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி நாடு பூராவும் விநியோகிப்பதற்கு முடியுமாகவுள்ளது. இது தொடர்பாக சீன அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது.
எமது நாட்டின் அரிசி உற்பத்தி, விநியோகத்தின் பின்னணியில் பெரும் மாபியாக்கள் செயற்பட்டு வருகின்றன. ஒருசில பெரியளவிலான அரசி ஆலை உற்பத்தியாளர்களே அரிசி விலையினை தீர்மானிக்கிறார்கள். இந்த நிலைமையினை இல்லாமலாக்குவதற்கு அரசாங்கம் நவீன வசதிகளைக் கொண்ட பல அரிசி ஆலைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்