இலங்கையின் கல்விமுறையில் உடனடி மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.
உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்துக்கும் அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதானிகள், கல்விமான்களுக்குமிடையிலான சந்திப்பொன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்று புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதையிட்டு சந்தோஷமடைகின்றோம். நமது நாட்டில் காணப்படும் கல்விமுறையில் உடனடி மாற்றங்கள் இடம்பெற வேண்டும். ஒரு மாணவன் தனது முதல் பட்டப்படிப்பை 21 வயதுக்குள் நிறைவு செய்து ஒரு தொழிலை உருவாக்கி 10 பேருக்கு தொழில் வழங்கும் அளவுக்கு கல்வித்திட்டங்கள் மாற்றம் பெறவேண்டும்.
பல்கலைக்கழகம் வரை கல்வி கற்றுவிட்டு மீண்டும் அரசாங்கத்தையே ஒரு தொழிலுக்காக காத்திருக்கும் கல்விமுறையை எதற்காக வைத்திருக்கின்றோம். இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பட்டதாரிகளாக வரவேண்டும். ஆனால் நாம் குறிப்பிட்ட மாணவர்களையே கலாசாலைகளுக்கு தெரிவு செய்கின்றோம். இந்த முறை பிழையானதாகும்.
அரசாங்கம் தமது வசதிக்கேற்ப மாணவர்களை இணைத்துக்கொள்ளட்டும். ஆனால் தகுதி வாய்ந்த ஏனைய மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்ள தரமான தனியார் பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)