Monday, May 20, 2024
Home » தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி

- பஸ்ஸின் சாரதி உட்பட நால்வர் காயம்

by Prashahini
January 9, 2024 3:00 pm 0 comment

மிஹிந்தலை கன்னட்டிய பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் ,மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (09) காலை 08.30 மணியளவில் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , பஸ்ஸின் சாரதி உட்பட நால்வர் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

அருணகம களத்தாவ பகுதியைச் சேர்ந்த 62 வயதான வை. ஜி இந்திரசிறி என்ற ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் சாரதி, நடத்துனர் மற்றும் இரு பெண்கள் உட்பட நால்வர் பலத்த காயத்திற்கு உள்ளாகி மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் போதன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் ஹொரவப்பொத்தானை கிவ்ளேகட பகுதியில் இருந்து அனுராதபுரத்திற்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பகுதியில் இருந்து மிஹிந்தலை பகுதிக்கும் சென்று கொண்டிருந்த வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது .

உயிரிழந்த நபர் கன்னட்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றை கடந்து செல்வதற்கு முயற்சித்த போது முன்னாள் வந்த பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியாதல் வீதியை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பஸ்ஸில் பயணித்த நால்வரும் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸ் உத்தியோத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மிஹிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். சந்திரசிறி ரஞ்ஜித்தின் ஆலோசனைப்படி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆர் .எஸ் . ரணசிங்க தலைமைலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT