மேற்கு நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பதற்கான உரிமையை (R 2 P) பலஸ்தீனத்தைப் பொறுத்தவரை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையிலேயே இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஈரானில் நடைபெற்ற பலஸ்தீனை மையப்படுத்தி பல நாடுகள் பங்குபற்றிய உயர்மட்ட ஆலோசனை (அரசியல்) மாநாட்டில் கவலை தெரிவித்தார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகர் தெஹ்ரானில் கடந்த சனிக்கிழமை(23) நடைபெற்ற பிரஸ்தாப பலஸ்தீனம் தொடர்பான பல் நாட்டு உயர்மட்ட அரசியல் ஆலோசனை மாநாட்டில், அந் நாட்டின் அழைப்பையேற்று, இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பங்குபற்றினார். பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், நிரந்தர தீர்வுக்கான அவசியம் குறித்தும் அவர் இம்மாநாட்டில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
பலஸ்தீனுடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கிறது. எந்தவொரு நாடும் அதன் புவிசார் அரசியல் (Geo-Political)நிலைப்பாடுகள் மீது ஏனைய நாடுகள் எவையும் தலையீடு செய்வதை விரும்புவதில்லை.
அவ்வாறிருக்க, மேற்கு நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பதற்கான உரிமையை (Right to Protect) பயன்படுத்தி தென் சூடானிலும், சிரியாவிலும் வேறு நாடுகள் ஊடுருவின. அதன் உண்மையான நோக்கம் நிறைவேறியதாக இல்லை. ஆனால், பலஸ்தீனத்தை பொறுத்தவரை நாங்கள் அந்த விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் .
இந்த உரிமை(R 2 P) இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேற்கு நாடுகளின் இரட்டை வேடம் இதுதான் என்றார்.