இயேசு பெருமான் அவதரித்த நாளான நத்தார் தினத்தை முன்னிட்டு பிரதேசத்துக்கு மாத்திரமன்றி தேசத்துக்கே முன்மாதிரியான சமய, கலாசார நல்லெண்ண சிறப்பு நிகழ்வொன்று கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று பாணந்துறையில் இடம்பெற்றது.
கிறிஸ்மஸ் பண்டிகை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக பௌத்த விகாரையிலிருந்து நகரிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு விகாராதிபதி தலைமையில் நத்தார் பரிசுகளுடன் நல்லெண்ண விஜயம் இடம்பெற்றது.
இவ்வாறான நிகழ்வொன்று இப்பிரதேசத்தில் இடம்பெற்றனை இதுவே முதன் முறையாகும்.
பாணந்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள கல்கொட ஸ்ரீ மஹாவிகாரையின் விகாராதிபதி இரத்தினபுரி பொதுபிடிய பஞ்ஞாசேகர தேரரின் தலைமையிலான தேரர்கள், பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அரச பணிமனைகளின் தலைமை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்ட னர்.
பாணந்துறை நகரிலுள்ள விக்சஷோப மாதா ஆலயத்தில் இந்த நிகழ்வு ஆலயத்தின் வணக்கத்துக்குரிய ரன்ஞன் பெர்ணான்டோ பிரதம பிதா தலைமையில் இடம்பெற்றது. பௌத்த தேரர்கள் குழுவினர் வணக்கத்துக்குரிய பிதா சானக மென்டிஸ் மற்றும் பிரமுகர்களினால் வரவேற்கப்பட்டனர். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டவர்களுக்கு விஷேட சிற்றுண்டி உபசாரமும் வழங்கப்பட்டது.
பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கா, ஆலயத்தின் செயலாளர் சனத் நாணயக்கார உட்பட பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை சிறந்த முன்மாதிரியான வேலைத் திட்டம் என பலரும் வரவேற்றுப் பாராட்டினர்.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்…
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)