அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குறித்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு வழக்கில், இம்ரான் கான் சார்பிலும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷி சார்பிலும் பிணை கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்து வந்த மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று குறித்த தீர்ப்பை வழங்கியது.
குறித்த இருவருக்கும் சர்தார் தாரிக் மசூத், அதார் மினால்லா, சையத் மன்சூர் அலி ஷா ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிபந்தனை பிணையை வழங்கியது.
அதன்படி குறித்த இருவரும் தலா ரூ.10 இலட்சம் ரொக்கப் பிணையில் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிணை அளித்துள்ள போதிலும் இம்ரான் கான் விடுவிக்கப்படுவது சந்தேகமே என அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் விடுவிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.