மூன்று வருடத்திற்கு அதிகமான காலம் வருமான அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்காத சுமார் 23 இலட்சம் வாகனங்கள் தொடர்பில், அடுத்த வருடத்தில் புதிய சட்டமொன்றைக் கொண்டு வர தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.
இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், மூன்று வருடங்களுக்கு அதிகமான காலம் புதுப்பிக்கப்படாதுள்ளன. இந்த வாகனங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 83 இலட்சம் வாகனங்களில் 55 இலட்சம் வாகனங்களே பதிவை புதுப்பித்துள்ளன.
அவ்வாறு பதிவை புதுப்பித்துக் கொள்ளாத வாகனங்கள் தொடர்பில், ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்றின் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகிறது. அடுத்த வருடத்தில் அந்த வாகனங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்