கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் கல்வி அமைச்சின் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த ஆண்டில் 3000 பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர்
ஏ.அரவிந்த குமார் தெரிவித்தார்.
மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் ஜே.எஸ்.எம்.பவாஹிதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில் கல்வி மேம்பாட்டுக்காக கல்வி சீர்திருத்த கொள்கையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
இதன்முதற்கட்டமாக இந்நாட்டில் காணப்படும் 10140 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3000 பாடசாலைகள் 2024 இல் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன.
இவற்றுள் மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையும் உள்வாங்கப்படவுள்ளது.
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் புதிய கல்வி மறுசீரமைப்பின் செயற்றிட்டத்தின் கீழ் S T E A M.கல்வி முறைமை மூலம் பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,கலை, கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட்டு உயர் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு இலகுவில் சிறந்ததொரு தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வழி வகுக்கும்.
விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் உள்நாட்டில் தொழில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட வெளிநாடுகளில் சிறந்த தொழில் வாய்ப்புகளையும் கூடுதலான வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். இதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் நன்மை கிடைக்கும். இந்நாட்டில் தற்போது வருடந்தோறும் தொழில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாத்தளை வலய கல்வி காரியாலய அதிகாரிகள்
இராஜாங்க அமைச்சரின் ஊடக செயலாளர் எம்.ஆர்.ஹசீம்தீன் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)