அளுத்கம, பெந்தோட்டை கடற்கரையில் நேற்று முன்தினம் (11) மாலை நீராடிய சீனன்கோட்டையைச் சேர்ந்த இளம் மாணிக்க வியாபாரியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவருடன் சேர்ந்து நீராடிய மற்றொரு இளைஞர் சுழியோடிகளால் காப்பாற்றப்பட்டு நாகொடை அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த இளைஞர் பேருவளை சீனன்கோட்டை, யூசுப் எவனியூவைச் சேர்ந்த இம்ரத் ரிம்ஸான் எனும் இளம் மாணிக்க வியாபாரியாவர். இவரின் இழப்பு சீனன்கோட்டை பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பனின் இழப்பு தாங்காது இளைஞர்கள் சிலர் கதறி அழுதனர்.
பெந்தோட்டை கடற்கரையில் மாலையில் உடற்பயிற்சி செய்த பின்னர் சக நண்பர்களுடன் இவ்விருவரும் கடலில் நீராடினர். இதன்போது இவ்விருவரும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். இதன்போது இம்ரத் ரிம்ஸான் உயிரிழந்தார். காப்பாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையை சேர்ந்த அக்மல் ரூமி ஹஸன் (வயது 23) இளம் இரத்தினக்கல் வர்த்தகராவர்.
நீரில் மூழ்கி மரணமான இம்ரத் ரிம்ஸானின் ஜனாஸா நேற்று ளுஹர் தொழுகையின் பின் சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், மாணிக்க வியாபாரிகள், இளைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
அஜ்வாத் பாஸி