இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது அதன் போர் அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ள காடி எய்சன்கொட்டின் மகன் காசாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
25 வயதான மேஜர் கால் எய்சன்கொட் வடக்கு காசாவில் கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டுள்ளார். சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் படுகாயமடைந்த கால் எய்சன்கொட் அந்தக் காயத்தினால் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாமும் தமது மனைவியும் மனமுடைந்திருப்பதாகவும் எய்சன்கொட் உண்மையான ஒரு வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.
காசா மீது தரைவழி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலிய படை சுமார் 100 துருப்புகளை அங்கு இழந்துள்ளது. தவிர, கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது 300க்கும் அதிகமான இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.