ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி நேற்று (08) ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தூதரகம் அமைந்திருக்கும் அதிக பாதுகாப்பான பசுமை வலயப் பகுதியில் நேற்றுக் காலையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வரும் நிலையில் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அரச மற்றும் இராஜதந்திர கட்டடங்கள் அமைந்திருக்கும் அந்தப் பகுதிக்கு அருகில் ரொக்கெட் குண்டுகள் விழுந்ததாக அமெரிக்க மற்றும் ஈராக் இராணுவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அங்கு அபாய சமிக்ஞை ஒலியும் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது குறைந்தது 66 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம்சாட்டுகிறது.