இலங்கையிலிருந்து இந்தியாவூடாக மலேசியாவுக்கு சிறுவர்களை கடத்தும் ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (50) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்தது.
ஆட் கடத்தலில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 05 வயதுக்கும் 17 வயதுக்குமிடைப்பட்ட 28 சிறுவர்கள் இலங்கையிலிருந்து மலேசியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை இச்சிறுவர்கள் நாடு திரும்பவில்லையெனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்தது.
17 வயதுக்குட்பட்ட 28 சிறுவர்கள் தாய்மாருடன் அல்லது தனியாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். எனினும்,தாய்மார் மட்டுமே மீளவும் நாடு திரும்பியதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியா செல்லும் குழந்தைகளை மலேசிய பெண் ஒருவர், அந்நாட்டு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.