இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் பத்தரமுல்லை எம்.டி.எச். ஜயவர்தன மகா வித்தியாலயத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
முல்லேரியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்துக் கல்லூரி 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்னிங்ஸை இடைநிறுத்தியது. முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த எம்.டி.எச். ஜயவர்தன அணி 28 ஓட்டங்களுக்கே சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ரிஷியுதன் 9.4 ஓவர்களில் ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காது 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்து அணி போட்டியில் வெற்றியீட்டியது.