பாராளுமன்றில் நேற்று (21) எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது அவருக்கு இடையூறு விளைவித்த சனத் நிஷாந்தவிற்கு இன்று முதல் 2 வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுக்கான வருகையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (22) பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பித்த நிலையில் சபாநாயகர் குறித்த அறிவிப்பை விடுத்தார்.
இதன்போது சபாநாயகர் தெரிவிக்கையில்,
“நேற்று அவையில் இடம்பெற்ற பாரிய ஒழுக்க மீறல் நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 146ஆம் ஒழுங்கு விதிகளுக்கு அமைய எனக்கு உரித்தான அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவதாக நான் உத்தரவிடுகிறேன்”
என அவர் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றம் நேற்று சாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிலையியற் கட்டளை 27/2இன் கீழ், கேள்விக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தொடர்பாக பாராளுமன்றம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என? அவர் கேள்வியெழுப்பினார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு பாராளுமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ஆத்திரமடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சித் தலைவரின் உரைக்கு தடைகளை ஏற்படுத்தினர்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திருந்த கடதாசிகளை எடுத்துச் சென்ற சனத் நிஷாந்த அதனை அங்கிருந்து கைமாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. அதனையடுத்து நிலவிய அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே, சபாநாயகர் ஐந்து நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக தெரிவித்து சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
எவ்வாறெனினும் அதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டன.