சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.குவைத்திலிருந்து அபுதாபி வழியாக சென்னை வரும் எயார் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக உளவுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து எயார் அரேபியா விமானத்தில் வந்த இந்திய பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதன்போது, அவரது உடமைகளுள் ரீசார்ஜ் செய்யக்கூடிய 03 எல்.இ.டி விளக்குகளில் 09 தங்கக் கட்டிகள், 03 தங்கத் தகடுகள் மற்றும் 03 தங்க வெட்டுத் துண்டுகள் என 4.93 கிலோ எடை கொண்ட 2.67 கோடி ரூபா மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தமை தெரியவந்தது.
இதேபோன்று நவம்பர் 09 இல்,கோலாலம்பூரிலிருந்து ஏ.கே 13 விமானத்தில் சென்னை வந்த மலேசிய பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது உடைமைகளுள் துளையிடும் டிரில்லிங் இயந்திரம் ஒன்றினுள் 3.49 கிலோ எடை கொண்ட 1.88 கோடி ரூபா மதிப்பிலான 03 தங்கக் கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து சுங்கச் சட்டம் 1962 இன் கீழ் 4.55 கோடி ரூபா மதிப்பிலான 8.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் இதுவரை மொத்தம் 112 கோடி ரூபா மதிப்பிலான 200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)