சர்வதேச குத்துச்சண்டை சம்மேளத்தினால் நடத்தப்படும் உலக கனிஷ்ட குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்கும் ஒரே வீரராக கொழும்பு சாஹிரா கல்லூரியின் துவான் மர்ஜுதீன் பங்கேற்கிறார்.
அர்மேனியாவின் யெர்வானில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற எல்.வி. ஜயவீர குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டியில் முதல் முறை குத்துச்சண்டை விளையாட்டில் களமிறங்கிய மர்ஜுதீன், பாடசாலை குத்துச்சண்டை விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மேற்படி போட்டியில் வெற்றியீட்டியதை அடுத்து டீ.பி. ஜாயா குத்துச்சண்டை போட்டியில் சாதித்த மர்ஜுதீன் ஆண்டிறுதியில் ஸ்டப்ஸ் ஷீல்ட் சம்பியன்சிப்பில் முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து கனிஷ்ட தேசிய சம்பியன்சிப் மற்றும் இந்த ஆண்டு ஸ்டப்ஸ் ஷீல்ட் போட்டியிலும் வெற்றிகளைக் குவித்த நிலையிலேயே இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை பயிற்சி முகாமில் பங்கேற்றார். இந்நிலையில் பயிற்சியாளர் அப்துல்லா இபுனு மற்றும் முகாமையாளரான இரத்தினபுரி, தர்மாசோக கல்லூரியின் அதிபர் அமில தன்டக்க ஆகிய இரு அதிகாரிகளுடனேயே மர்ஜுதீன் உலக கனிஷ்ட குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.