வட மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக தென்பகுதியிலிருந்து வருவோர், பல பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அவர்களை சொந்த இடங்களுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இவ்வாறு வருவோர் மொழி, தங்குமிடம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இவர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வட மாகாணத்திலுள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இவை தொடர்பில் பிரதமரோடு கலந்துரையாடியிருந்தேன். வடமாகாணத்தில்,தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.இங்கு,தொழில்வாய்ப்புக்களை வழங்குகையில்
தமிழ் பேசும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும்.இதற்கு முன்னரும் அமைச்சரவையில் பிரமதருக்கு இதுபற்றி தௌிவுபடுத்தினேன். இதை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
விரைவில், இவை நடைமுறைக்கு வரும்.
அறியாமையில் செய்யப்பட்ட விடயமா? அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.
(யாழ். விசேட நிருபர்)