தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தவர், கொலைக்கு உத்தரவிட்டவர் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் (22) நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மட்டுமல்லாமல் பல்வேறு விடயங்களைப் பகிரங்கமாக கூறியுள்ளார். அதில் அவர் கூறிய விடயங்கள் சம்பந்தமாக வீடியோ ஒன்றை சனல் 04 வெளியிட்டுள்ளது.
அது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விடயங்களுடன் வரையறுக்கப்பட்டிருந்தது. இத்தாக்குதல் 2019 இல், இடம்பெற்றது.
ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் பல்வேறு கருத்துக்களையும் ஆஸாத் மௌலானா கூறியிருக்கின்றார். அந்தக் கருத்துக்கள் மூன்றாவது நபர் மூலமாக எனக்கும் வந்து சேர்ந்திருக்கிறது.
எனினும், அது சம்பந்தமான முழுமையான தகவல்கள் வரும் வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், எனக்கு வந்திருக்கும் தகவலில் நண்பர் ரவிராஜைக் கொலை செய்தது யார், கொலைக்கு உத்தரவிட்டது யார்?, அதிலும் முதல் உத்தரவு கடைசி உத்தரவு என இந்த உத்தரவுகளை பிறப்பித்தது யார்? என்பது சம்பந்தமாக எல்லாம் கூறியுள்ளார்.
ஆனாலும் இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் வரும் வரையில் பொறுத்திருக்கிறேன்.
அனைத்தும் வந்த பின்னர் முழுமையாக வெளிப்படுத்தத் தயாராகவுள்ளேன். இது தான் உண்மை என்றார்.