கலைஞர்களுடைய சுதந்திரத்தில் தலையீடு செய்து அரசியல் இலாபம் தேடுவதை விடுத்து மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்,
எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தமிழக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஓர் பிரமாண்டமான இசை நிகழ்வொன்றை யாழ்ப்பாண மக்களுக்காக நடத்தவுள்ளார்.
இந்நிலையில் குறித்த தினத்தில் இசைநிகழ்வை நடத்த வேண்டாம், இன்னுமொரு தினத்தில் அதை நடாத்துமாறு அரசியல் கட்சியொன்று கடிதம் வெளியிட்டுள்ளது.அந்த கட்சி முன்வைத்த காரணம் ஏற்புடையதாகவுள்ள போதிலும் நிகழ்வு இடம்பெற சில தினங்களே உள்ள நிலையில் இக்கோரிக்கை முறையானது அல்ல. இக்கோரிக்கையானது அரசியல் தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.
வலியோடும்-வேதனையோடும் இருக்கும் மக்களை ஆற்றுப்படுத்தும் பணிகளை இசைக்கலைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்வுக்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நிகழ்வை தடுத்து நிறுத்துவது முறையான செயற்பாடு அல்ல என மேலும் அவர் தெரிவித்தார்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)