கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 300 அபாயகரமான மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இம்மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து இம்மரங்களை அகற்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 1,00,000 க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் 300 அபாயகரமானவை என, இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கலந்துரையாடலிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புறநகர் பகுதிகளில் சூழலுக்குப் பொருத்தமான மரங்கள் நடப்படுவதை உறுதி செய்யும் முறையான திட்டத்தை தயாரிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லையில், குறுகிய கால தீர்வாக பொருத்தமான வேலைத்திட்டங்களை முறையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆரம்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து தொழினுட்ப உதவிகளைப் பெறுவதற்கும் மற்றும் புறநகர் பகுதிகளில் அபாயகரமான மரங்களை அடையாளம் காணவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு நீண்டகால தீர்வைத் தயாரிக்கவும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் பயன்படுத்தும் தொழினுட்ப முறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.