சீனா 201 சாதனை தங்கப்பதங்களை வென்ற நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நேற்று (08) நிறைவுக்கு வந்தது.
சீனாவின் ஹான்சோ நகரில் இரண்டு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு நிகழ்வு 80,000 பேர் அமரக்கூடிய ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்றதோடு அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியை 2026 ஆம் ஆண்டில் நடத்த ஜப்பானுக்கு கையளிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றபோதும் கொரோனா தொற்று காரணமாக இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டி இரண்டு ஆண்டுகள் தாமதித்து நடைபெற்றதால் குறுகிய காலத்தில் நகோயாவில் அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
இம்முறை போட்டியின் கடைசி தங்கப்பதக்கத்தை 50 கிலோகிராம் குமிடே கராட்டே போட்டியில் தாய்வானின் கு ஷியோ சுவாங் வெற்றி பெற்றார். எனினும் முழு ஆதிக்கம் செலுத்திய போட்டியை நடத்தும் சீனா 201 தங்கப்பதக்கங்களை வென்று ஆசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் அதிக தங்கப் பதக்கங்களை வெற்ற சொந்த சாதனையை முறியடித்தது. 2010 குவான்சே போட்டியில் 199 தங்கங்களை வென்ற சாதனையே முறியடிக்கப்பட்டது.
எனினும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா 1982 தொடக்கம் பதக்கப் பட்டியில் முதலித்தை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிக இடைவெளியுடன் ஜப்பான் 52 தங்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும் தென் கொரியா 42 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இதில் 28 தங்கங்களுடன் நான்காவது இடத்தை பிடித்த இந்தியா மொத்தமா 107 பதக்கங்களை வென்று முதல் முறை 100 பதக்கங்களை தாண்டியது. இலங்கை ஒரு தங்கம் 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 28 ஆவது இடத்தை பிடித்தது.