மூன்று இலங்கையர்கள், மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய செய்திகள் தெரிவித்துள்ளன.
இப்படுகொலையில் இலங்கையர் இருவருக்கு தொடர்பிருக்கலாமென மலேசிய பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை, கோலாலம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்றிரவு (22) இந்த கொலைகள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும், இரண்டு இலங்கையருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
சுமார் 02 நாட்களுக்கு முன்னர் இவ்வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர் வந்திருந்ததாகவும், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அயலவர்கள் வழங்கிய தகவலின்படி வீட்டை சோதனை செய்த பொலிஸார், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளனர். தலைமறைவாகியுள்ள இரண்டு இலங்கையரின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியி ட்டுள்ளனர். மலேசிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட இலங்கையர் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மூவரும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் தலையில் பிளாஸ்டிக் பைகளால் கழுத்துவரை மூடிக்கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.