கண்டி பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் தித்தவெல்மங்கட எனுமிடத்தில் இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் வரகாபொல மற்றும் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தங்கோவிட்ட மற்றும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கம்பஹா நிட்டம்புவ எனுமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் வெலிமடையில் இருந்து வந்த பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், பஸ்ஸின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்தையடுத்து, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்களும், பொலிஸாரும் மேற்கொண்டதோடு, விபத்து காரணமாக அந்த சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இவ்விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.