– வேனை செலுத்திய சாரதி கைது
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வேன், அதே திசையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதி மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றிருந்ததால், அவர் இரண்டு லொறிகளுக்கும் இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் பின்பகுதியில் இருந்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில், முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46, 58 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.
மேலும், வேனில் பயணித்த 3 பெண்கள் மற்றும் லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த 3 ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.