பாகிஸ்தானின் செனட்டர் அன்வார் உல் ஹக் கக்கர் நாட்டின் இடைக்காலப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் முடியும்வரை நாட்டின் பொறுப்புகளை அவர் பார்த்துக்கொள்வார்.
கக்கர் பாகிஸ்தானில் மிகக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட பலுசிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். அதன் அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டதாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷெபாஸ் ஷரிப் கூறினார்.
பாகிஸ்தானின் ஜனாதிபதி அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். ஆனால் அது தள்ளிப்போகக்கூடும் என்ற அக்கறை எழுந்துள்ளது. அண்மைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் எல்லைகள் மீண்டும் வரையறுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதற்குப் பல மாதங்களாகக்கூடும்.
எனவே தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்று ஷரிப் குறிப்பிட்டார்.
எனினும் கடந்த வாரம் ஊழல் குற்றச்சாட்டில் குற்றங்காணப்பட்டு கடந்த வாரம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்.
2022 இடம்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் நாட்டில் அரசியல் பதற்றம் நீடிக்கும் நிலையிலேயே இடைக்கால அரசு ஒன்று பதவி ஏற்றுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதோடு பாதுகாப்பு பிரச்சினைக்கும் முகம்கொடுத்துள்ளது.