புத்தளம் பகுதியிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இவ்விபத்தானமது நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே இடம்பெற்றுள்ளது.
புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் 22 பேர் பயணித்துள்ள நிலையில், பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நால்வர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)