முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான வழக்கானது இன்று (22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிப்பது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையை நீதிமன்றுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாங்குளம் குறூப் நிருபர்