பட்டிருப்பு கிராமத்தில் மிக நீண்டகாலமாக குண்டும் குழியுமாகக் காணப்பட்டு வந்த விபுலானந்தா முதலாம் குறுக்கு வீதி கொங்றீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படுகிறது.
இவ்வீதி புனரமைப்புக்கான வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதி புனரமைப்பு செய்யப்படுகிறது.
வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வீதி புனரமைப்புச் செய்வதன்மூலம் பட்டிருப்பு, களுவாஞ்க்சிகுடி, எருவில் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் நன்மையடையவுள்ளனர்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)