தும்புக்கயிறு திரிக்கும் இயந்திரத்தில் சிக்கி கையை இழந்த பெண் ஒருவரின் அதே கையை 06 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் பொருத்தி கண்டியில் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
35 வயதுடைய இப்பெண், கயிறு திரிக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்த
போது, இயந்திரம் தானாக இயங்கியதால் பெண்ணின் வலதுகை தோல் பட்டடையிலிருந்து சுமார் 04 அங்குலத்துக்கு கீழே முற்றாக கழன்றுபோனது.
கண்டி தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்கரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் அந்தக் கையை பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.
தும்புக்கயிறு திரிக்கும் இயந்திரத்தை அப்பெண் சுத்தம் செய்த போது, அந்த இயந்திரம் திடீரென வேலை செய்யத் தொடங்கிய நிலையில் அவரது வலதுகை முழங்கைக்கு மேலுள்ள பகுதி இயந்திரத்தில் சிக்கி உடைந்தது. அவர் உடனடியாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகள் வழங்கிய பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வைத்தியர் அமில சசங்கரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் வைத்தியர் உதய கிரிதேன, எலும்பியல் வைத்திய நிபுணர் சத்திர பிரேமரத்ன, வைத்திய நிபுணர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் உடுவெல, கசுன் மற்றும் சேனக ஆகியோர் சத்திர சிகிச்சையில் இணைந்தனர்.
ஷியாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கொஸ்தா உள்ளிட்ட தாதியர் குழுவும் சத்திர சிகிச்சைக்கு உதவினர்.
அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஊழியர்களும் இணைந்து துண்டிக்கப்பட்ட கையை ஐஸ் கட்டிகளுக்குள் இட்டு, மிகவும் பத்திரமாக வைத்தியசாலைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதன் காரணமாகவே சத்திரசிகிச்சையில் ஈடுபட்ட வைத்தியர்களால் கையை வெற்றிகரமாக பொருத்த முடிந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண், கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.