ஜனவரி மாத இறுதிக்குள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டுமென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை நிலையம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் கடந்த (07) ஞாயிற்றுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச புலம்பெயர் பணியாளர்களின் தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 இல், நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் நுவரெலியா மாவட்ட புலம்பெயர் பணியாளர்களர்கள் குடும்பங்களின் பிள்ளைகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த கிளை நிறுவனம் திறக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மாபெறும் பங்காற்றிவரும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில், தனக்கு கிடைத்த வேண்டுகோள்களை முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.
அந்தவகையில் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தனது உரையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இவரின் வேண்டுகோள் இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி திகதி குறித்துள்ளார்.தன்னை அழைத்து இதுபற்றி பேசியும் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.