செங்கடல் ஊடாக நாட்டுக்கு வருகைதரும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்காவிட்டால், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் துறைமுகங்கள் கடும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதிக்கும் அமைச்சர்கள் சிலருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மகா பராக்கிரம மன்னனின் ஆட்சிக்காலத்தின் பின்னர், சர்வதேச கடல் பாதுகாப்புக்காக கப்பல்களை இலங்கை அனுப்பியுள்ளமை இது முதல்தடவையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, செங்கடல் பாதுகாப்பிற்கு கப்பல் அனுப்புவதற்கு செலவாகும் நிதி தொடர்பில் நாம் சிந்தித்து, நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாட்டுக்கு கப்பல்கள் வருகை நின்றுவிடும்.இவ்வாறு ஏற்படின் நாடு பெரும் நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.
செங்கடலுக்கு யுத்தக் கப்பலை அனுப்புவது பொருட்கள் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவேயன்றி, நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் யுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கல்ல.
தமது நாடுகளுக்கு வருகை தரும் பொருட்கள் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை பிராந்தியத்தின் ஏனைய நாடுகளும் தற்போது முன்னெடுத்துள்ளன.
ஹூதி கிளர்ச்சியாளர்க ளினால் அச்சுறுத்தலால்,தற்போது பெருமளவு கப்பல்கள் செங்கடலை தவிர்த்து வேறு வழியாக பயணிக்கின்றன.இதனால், கப்பல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்து வருகின்றது. கொழும்புத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதற்கு தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கும் இடமுண்டு. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எரிபொருள் கப்பல் வரும்வரை காத்திருந்த நாடு. தற்போது சார்வதேச கடலில் பாதுகாப்பிற்காக கப்பலை அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஹூதி நடவடிக்கை களுக்கு எதிராக இலங்கையின் கடற்படை கப்பல் செங்கடலுக்கு அனுப்பப்படும். பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்