டீசல் விலை அதிகரித்தாலும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
டீசல் விலை அதிகரிப்புக்கு ஏற்பவும் கட்டண கொள்கைக்கு இணங்கவும் ஒரு கிலோமீற்றருக்கான போக்குவரத்து செலவு 4% அதிகரிப்பு ஏற்பட்டாலே பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். இந்நிலையில், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 358 ரூபாவாக அதிகரித்துள்ளது.இந்த அதிகரிப்பு கட்டண சூத்திரத்தின் பிரகாரம் ஒரு கிலோமீற்றருக்கான போக்குவரத்து செலவு 2.0% வீதத்தை தாண்டவில்லை.இதனால்,
பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாதென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பஸ் கட்டணங்கள் தொடர்பில்,இரண்டு தனியார் பஸ் சங்கங்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. அகில இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் அதுதொடர்பில் தெரிவிக்கையில், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 35 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பஸ் கட்டணம் தொடர்பில் தேசிய கொள்கைக்கு இணங்க, பஸ் கட்டணத்தை தற்போது அதிகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)