கந்தப்பளை கொங்கோடியா மேல் பிரிவு தோட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 09 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் இடம்பெயர்ந்து குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இடைவிடாது கடும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கந்தப்பளை பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.
இப்பிரதேசத்தில் காட்டாறுகள்,கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து விவசாய நிலங்கள்,வீடுகள்,பிரதான வீதிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் காணப்படும் புது வீட்டுப் பகுதிகளில் ஆங்காங்கே பாரிய மண்மேடுகள், சரிவுகள் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கொங்கோடியா தோட்டம் மேல் பிரிவில் கடந்த 2002 ஆம் ஆண்டு தோட்ட நிர்வாகத்தினால் வீடற்றவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் பயனாளிகள் கடன் அடிப்படையில் அமைத்துக் கொண்ட தனி வீட்டு பகுதிகளிலும் மண்மேடுகள் சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
(ஆ.ரமேஷ்)