இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர், முஸ்லிம் மகளிர் அமைப்புக்கள், வை.எம்.எம்.ஏ, வை, டபிள்யூ. எம். ஏ அமைப்பு, பள்ளிவாசல் சம்மேளனம் போன்ற முஸ்லிம் அமைப்புகள் அண்மைக் காலமாக நடத்தி வருகின்றன.
இதன் அடிப்படையில் பதுளை பெரியபள்ளிவாயல், உலமா சபையினர், வை.எம்.எம்.ஏ அமைப்பினர், வை,டபிள்யூ. எம்.எ அமைப்பினர் இனங்களுக்கிடையேயான ‘நல்லிணக்கத்திற்கு உதவும் கரம்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த இஸ்லாம் தொடர்பான நிகழ்வுகள் பதுளை பெரிய பள்ளிவாசலில் அண்மையில் நடைபெற்றன.
இதன் போது முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், கலை, வீட்டுப் பாவனை பொருட்கள், சுத்தம், சுகாதாரம், அழகுபடுத்தல், அரபு எழுத்தணி, பள்ளிவாயல் சூழல், தொழுகை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
முஸ்லிம்கள் காலமான பின்னர் இடம்பெறும் சடங்குகள், குளிப்பாட்டல் மற்றும் மைய அடக்கம் தொடர்பான விளக்கவுரைகளும் செயல்முறைகளும் குறித்து அங்கு விளக்கமளிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அன்றாட விடயங்கள் இங்கு நட்புரீதியாக கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேறு மதத்தவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்ைகயில் “இத்தகைய நிகழ்வானது மதங்கள் தொடர்பான புரிந்துணர்வை எமக்கு ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டனர்.
“இனங்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவோருக்கு இவ்வாறான நிகழ்ச்சி மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இனிமேலும் இனங்களிடையே முறுகல் நிலை ஏற்படாதிருக்க நாம் திடசங்கற்பம் பூண வேண்டும். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்நாட்டின் இனங்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பு உண்டு” எனவும் அந்நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
இதுபோன்ற உணர்வுபூர்வமான நிகழ்வு நாடு பூராவும் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமிய நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இவ்வைபவத்தில் பதுளை வைத்தியசாலை ெடாக்டர்கள், தாதியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பெளத்த, இந்து, கத்தோலிக்க மதகுருமார், பொலிஸ் உயர் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன், இஸ்லாம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கமும் தெளிவும் வழங்கப்பட்டமை குறிப்படத்தக்கதாகும்.
தேசமான்ய எம்.ஏ.எம்.ஹசனார்…?(ஜே.பி)
(ஊவா சுழற்சி நிருபர்)