மின் கட்டண அதிகரிப்பையடுத்து இதுவரை ஐந்து இலட்சம் மின் பாவனையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐம்பது இலட்சம் மின் பாவனையாளர்களின் மின் இணைப்பை துண்டிப்பதற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சார சபை தற்போது அதிக இலாபம் ஈட்டி வருகின்றது. இந்நிலையிலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், அந்த வகையில் நீர் மின் உற்பத்தி மூலம் மின்சாரசபை பெற்றுவரும் இலாபம் தொடர்பில் சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர்,
மின்சார சபை இலாபமீட்டி வருவதால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்ட போது அதனை நாம் எதிர்த்தோம்.
தற்போது அதிக மின் கட்டணம் காரணமாக இதுவரை ஐந்து இலட்சம் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 50இலட்சம் பேருக்கு மின்சார துண்டிப்புக்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை தெரியவருகிறது.
முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் அபயராம விகாரையின் மின்சாரத்தை அநீதியான முறையில் துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார சபை நீர் மின்சார உற்பத்தி மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டிவரும் நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வரும் 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்திருப்பது நியாயமற்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள 50 இலட்சம் மக்களின் மின்சாரத்தை துண்டிக்க அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கும் போது, அது தொடர்பில் நாம் பேசாமல் இருக்க முடியாது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)