கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப்பணிகளை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பூர்த்திசெய்யும் இலக்கை கொண்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க இலங்கை துறைமுக அதிகாரசபை இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கிழக்கு முனையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே, இவ்வாறு தெரிவித்தார்.
இந்த முனையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இறங்குதுறை 1,400 மீற்றர் நீளம் கொண்டது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர், 03 பாரிய கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். கப்பல்களிலிருந்து கொள்கலன்களை இறக்குவதற்கு 12 கேன்ட்ரி கிரேன்களும், கொள்கலன்களை வைப்பதற்கு 40 கேன்ட்ரி கிரேன்களும் கிழக்கு முனையத்தில் நிறுவப்படும். மற்றும் கொள்கலன் இறங்குதுறையின் பரப்பளவு 75 ஹெக்டேயராக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 03 மில்லியன் கொள்கலன்களைக் கையாள திட்டமிடப்பட்டுள்ள கிழக்கு முனையம், அரை தானியங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
இந்த கிழக்கு முனையத்தின் அபிவிருத்திக்காக 585 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது. அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் இலங்கை துறைமுக அதிகார சபையினாலேயே மேற்கொள்ளப்படும். கட்டட ஒப்பந்ததாரர்கள் சைனா இன்ஜினியரிங் மற்றும் அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவனங்களாகும்.
நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கிழக்கு முனையத்துக்கு விஜயம் செய்த போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பெர்னாட், உப தலைவர் கயான் அழகேவத்தகே, முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் மாளவிகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.