நச்சுத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, போதை மாத்திரைகளை பயன்படுத்தும் நிலை நாட்டில் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை,யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் காணப்படும் 80 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் 160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோகிராம், 745 கிராம் கஞ்சா மற்றும் 683 போதை மாத்திரைகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 80 சந்தேக நபர்களில் 03 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 74 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்