நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் பொருளாதார வேலைத் திட்டத்தைத் தவிர்த்து வேறு மாற்று வழிகள் இருப்பின், எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென போக்குவரத்து, மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவு இல்லாத குழுக்களே மக்கள் முன்னிலையில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது வெறும் வார்த்தைகளால் முடியாத செயல் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அமைச்சர்;
2023 ஆம் ஆண்டு வரி விதிப்பின் மூலம் பெறப்பட்ட அரச வருமானம் 3201 பில்லியன் ரூபாவாகும். நிவாரணங்கள், சம்பளம் மற்றும் அரச கடன்கள் ஆகியவற்றுக்காக திறைசேரியிலிருந்து செலவிடப்பட்ட தொகை 4394 பில்லியன் ரூபாவாகும்.
அரச செலவில் எப்பகுதி குறைக்கப்படும் என்பதை மாற்றுக் கருத்துள்ள குழுக்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் இல்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார். 2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி மக்களுக்குத் தெரியும்.
அதிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத் திட்டத்தினால் இலங்கையின் பொருளாதாரம் இன்று சாதகமான நிலையை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு தொடர்பில் குறிப்பிடுவதாயின், வரிப் பணம் உட்பட மொத்த அரச வருமானம் 3201 பில்லியன் ரூபாவாகும்.
அதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் 1550 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கத்தினால் 923 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தினால் 169 பில்லியன் ரூபாவும், மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் 20 பில்லியன் ரூபாவும் பங்களிப்புச் செய்யப்பட்டுளன. இந்தத் தொகை திறைசேரிக்குக் கிடைத்த வருமானம் ஆகும். ஆனால் கடந்த வருடம் திறைசேரியால் செலவிடப்பட்ட பணத்தின் அளவு 4394 பில்லியன் ரூபாவாகும்.
நிவாரணங்கள், அரச கடன்கள், அரச ஊழியர்களுக்கான சம்பளம் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், திறைசேரியில் இருந்து 13,292 பில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படுகிறது. எரிவாயு வரிசைகள் இல்லை. தடையற்ற மின் விநியோகம் இருக்கிறது. அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த செயற்பாடுகள் மூலம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு மாற்றாக வேறுவழி எதுவும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்றார்.