நூறு வருட வரலாறுள்ள திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்த்துள்ளார்.
சண்முகா மகளிர் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்த காலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முயற் சித்த போதிலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டது.இதை தொடர்ந்து 30 வருட குத்தகைக்கு புதிய காணி பெற்றுக்கொடுக்கப்பட்டது. குத்தகை தொகையை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு ஆளுநரின் இச்செயற்பாட்டை வரவேற்றுள்ள பாடசாலை நிர்வாகம், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.காணி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாடசாலையில் நீண்டகாலமாக காணிப்பிரசினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும், பாடசாலைகளுக்கான காணியை உடனடியாக பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன்,சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் எனது கவனத்துக்கு கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.