ஈழத்து இலக்கியப் பரப்பில் “கருணை யோகன்” என்ற புனைப் பெயரில் புகழ் பெற்றிருந்த ஓய்வுநிலை பேராசிரியர் செ. யோகராசா சுகயீனமடைந்திருந்த நிலையில், நேற்று காலமானார். யாழ்ப்பாணம் கரணவாய் மண்ணின் மைந்தர் செல்லையா யோகராசா. 1960-1972 வரை “கருணை யோகன்” புனைப்பெயரில் இயங்கி கவிதை கதைகளை எழுதி வந்தார். பின்னர் ஆய்வுத்துறையைத் தேர்ந்து கொண்டு, தனது சொந்தப் பெயரில் எழுதத் தொடங்கினார். நவீன தமிழ் இலக்கியம்,தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், நாட்டாரியல், கல்வி என்று பலதுறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர் இவர்.
சுறுசுறுப்பாக இயங்கும் இலக்கியத் தேனியாக இலங்கையின் பல பாகங்களையும் இலக்கியச் செயற்பாடுகளுக்காகச் சுற்றிவருபவர். பிரதேசவாதம், சாதிமத வேறுபாடு என்பவை இம்மியும் சேராத,படைப்பு கருதியவர். சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் ,சுவிற்சலாந்து, பிரான்ஸ், தமிழ்நாடு ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மாநாடுகளில் அவர் வாசித்த ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன. ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில், தன் ஆய்வுகள் மூலம் பெரும் பங்காற்றிவரும் செ.யோகராசா தனது ஆய்வுப் பணிக்காக விருதுகள் பல வென்றவராவார்.