– நவம்பர் 27 முதல் டிசம்பர் 04 வரை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்
2023 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி இடம்பெற்ற குறித்த பரிட்சையின் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.doenets.lk/examresult ஊடாக நேரடியாக பார்வையிடலாம்.
நாடு முழுவதும் 2,888 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு, 3 இலட்சத்து 38 ஆயிரத்து 037 (338,037) மாணவர்கள் தோற்றுவதற்கு பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவர்களில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 249 (332,249) மாணவர்கள் பரீட்சை கேள்வி தோன்றியுள்ளதாக பரிசோதனை காலத்தில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சையில் 50 ஆயிரத்து 644 (50,644) மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
ஆயினும் அரசாங்கத்தால் உதவிப் பணம் பெறுகின்ற மாணவர்கள் 20,000 பேர் என்பதோடு, அதில் விசேட தேவையுடைய 250 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
குறைத்த பரீட்சை தொடர்பான மீள் பரிசீலனைக்கு எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 04 வரை விண்ணப்பிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர்கள், மாகாண மற்றும் வலையக் கல்வி பணிப்பாளர்களும், தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை என்பது மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நடைமுறைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு பரிட்சை என்பதோடு, தாம் விரும்புகின்ற பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் குறித்த பரிட்சையில் மாத்திரம் வெற்றி பெற்றதன் மூலமாகவோ, வெற்றி பெறாததன் மூலமாகவோ மாணவர்களின் எதிர்காலத்தை இன்றே தீர்மானிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரிட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, பரிட்சையில் போதிய புள்ளிகளை பெறாத மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு வாழ்த்துகள்.