சீனாவிலிருந்து கடலுணவு இறக்குமதி செய்யப்படாதெனவும் விசேடமாக இலங்கையின் வட மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாதென்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்தார். சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் நேற்று (06) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்கென 500 உலருணவுப் பொதிகளை கையளித்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, இலங்கைக்கான சீன தூதுவர்
கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.இதுபற்றி சீன தூதுவர் மேலும் தெரிவித்ததாவது:
பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையின் பொருளாதாரதாதை உயர்த்துவதற்கு சீனாவே முதன்முறையாக
கை கொடுத்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகளை சீனா செய்யவுள்ளது. இன்னும், 15 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது.இவற்றில், 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும் 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா வந்தபோது இலங்கையின் கடலுணவுகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சீனாவிலிருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வட மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.
சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. அங்கு மிகப்பெரிய
சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை இதற்கே வரவேற்கிறோம்.
இலங்கையின் வட மாகாணத்தில் முதலிட சீன தொழிற்றுறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் இதனை வரவேற்க
தயாராகவுள்ளதாகவே நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். விசேட, யாழ். குறூப் நிருபர்கள்