புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஆடையகமொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற தீ விபத்தில் எரிகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த விபத்தில் சிக்குண்டு சுமார் 23 பேர் எரிகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.